டீசல் கார் பக்கம் வாடிக்கையாளர்கள் செல்வதை தடுக்கும் வகையில் மாருதி நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளது. இது பிஎஸ்6 டீசல் கார்கள...
டீசல் கார் பக்கம் வாடிக்கையாளர்கள் செல்வதை தடுக்கும் வகையில் மாருதி நிறுவனம் புதிய விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளது. இது பிஎஸ்6 டீசல் கார்களை விற்பனை செய்யும் போட்டியாளர்களுக்கும், இதுவரை மாருதி டீசல் கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1ந் தேதி முதல் பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால், பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான எஞ்சினுடன் கார்களை விற்பனை செய்வது கட்டாயமாகி உள்ளது. அனைத்து வகையான வாகனங்களும் இந்தியாவில் கடுமையான விதிகள் கொண்ட பிஎஸ்6 விதிகளுக்கு உட்பட்டதாகவே விற்பனை செய்ய முடியும்.
கடந்த ஓர் ஆண்டாகவே பிஎஸ்6 எஞ்சின் தேர்வுகளில் கார் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகியும் கூட கடந்த ஓர் ஆண்டு காலமாகவே பிஎஸ்6 கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்து வருகிறது.
அதேநேரத்தில், பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வந்த பின்னர் டீசல் கார் விற்பனையை நிறுத்தப்போவதாகவும் அறிவித்தது. பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளுக்கு தக்கவாறு டீசல் கார்களை தரம் உயர்த்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதுடன், டீசல் கார்களின் எதிர்காலமும் சந்தேகத்திற்கு இடமானதாகவே இருந்து வருகிறது.
இதன் காரணமாக, டீசல் கார் விற்பனையை நிறுத்திவிட்டது மாருதி சுஸுகி நிறுவனம். எனினும், வாடிக்கையாளர்களிடம் இருந்து டீசல் கார்கள் குறித்து அதிக விசாரணைகள் வரும்பட்சத்தில், சொந்தமாக உருவாக்கிய 1.5 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தெரிவித்தது.
அதாவது, பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களின் விலை ரூ.80,000 முதல் ரூ.1.50 லட்சம் வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படுவது வாடிக்கை. அதனை வைத்து ஒரு விளம்பரத்தை மாருதி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளது.
அதில், பெட்ரோல் கார்களைவிட டீசல் கார்களுக்கு கூடுதலாக செய்யும் முதலீட்டை, நீங்கள் 2.60 லட்சம் கிலோமீட்டர் தூரம் ஓட்டிய பிறகே சமன் செய்ய முடியும். இதற்கான முதலீடு, செலவுகளை கணக்கிட்டு புத்திசாலித்தனமாக முடிவு எடுங்கள். பெட்ரோல் வாங்குவதே சிறந்தது என்பதை இவ்வாறு என்று அந்த விளம்பரத்தில் வெளிப்படுத்தி உள்ளது மாருதி.
அதாவது, டீசல் கார் விற்பனையை நிறுத்திய உடன் இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருக்கிறது. டீசல் கார்களைவிட மாசு உமிழ்வு குறைவான பெட்ரோல் கார்களை ஊக்குவிக்கும் விதமாக விளம்பரம் செய்வதில் தவறில்லை. ஆனால், இத்தனை ஆண்டு காலமாக டீசல் கார்களை அதிக அளவில் விற்பனை செய்து வந்த மாருதி திடீரென வாடிக்கையாளர்களுக்கு அக்கறையான விஷயத்தை சொல்வது போல இந்த விளம்பரம் அமைந்துள்ளது.
பிஎஸ்-6 கார்களைவிட அதிக மாசு உமிழ்வு ஏற்படுத்தி வந்த பிஎஸ்4 கார் விற்பனையின்போது இதுபோன்ற ஒரு அக்கறையான விஷயத்தை மாருதி சொல்லவில்லை. தற்போது பெட்ரோல் கார்களை மட்டுமே விற்பனை செய்ய முடிவு செய்துள்ள அந்நிறுவனம் இந்த விளம்பரத்தை வெளியிட்டு இருப்பது இதுவரை மாருதி டீசல் கார் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஏமாற்றத்தை தரும் விதமாகவே அமைந்துள்ளது. ஹூண்டாய், கியா, டாடா என பிற போட்டியாளர்கள் டீசல் கார் விற்பனையை தொடரும் நிலையில், இந்த விளம்பரத்தை மாருதி வெளியிட்டுள்ளது.
டீசல் கார்களின் டார்க், எரிபொருள் சிக்கனம், நீடித்த உழைப்பு ஆகியவை வாடிக்கையாளர்களை கவர்ந்த விஷயமாக இருக்கிறது. விலை, பராமரிப்பு செலவு அதிகம் இருந்தாலும், டீசல் கார்களுக்கென தனி வாடிக்கையாளர் வட்டம் உண்டு. அரசாங்க விதிகள் காரணமாகவும், எதிர்காலத்தில் டீசல் கார்கள் மீதான விதிகள் கடுமையாக்கப்படும் என்ற அச்சமும் இப்போது அதன் மார்க்கெட்டை வெகுவாக சுருக்கிவிட்டது.
COMMENTS