கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 6ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம், ஜூன் 6ம் தேதி வரை நீ்ட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று பரவாமல் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி உள்ளனர். வீடுகள், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை மாதத்துக்கு தள்ளிவைக்க வேண்டும் என, வழக்கறிஞர் ராஜசேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், சொத்து வரி, குடிநீர் கட்டணம், விவசாய கடன் தவணைகள் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், மின் கட்டணங்களை மே 6 ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், வீடுகளுக்கான குறைந்த அழுத்த மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்துவதற்கான கால அவகாசத்தை ஜூலை 31 வரை நீட்டிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரியுள்ளார்.
இந்த வழக்கு, நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், மின் கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசம் ஜூன் 6ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.அதை பதிவு செய்த நீதிபதிகள், வழக்கின் விசாரணையை ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
COMMENTS