கொரோனா வைரசுக்கு எதிரான போரில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவியை தொடர்ந்து, டாடா குழுமம் அடுத்த ஒரு நல்ல காரியத்தை செய்யவுள்ளது. கொரோனா வ...
கொரோனா வைரசுக்கு எதிரான போரில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவியை தொடர்ந்து, டாடா குழுமம் அடுத்த ஒரு நல்ல காரியத்தை செய்யவுள்ளது.
கொரோனா வைரஸ் வகையை சேர்ந்த கோவிட்-19 இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. சீனா, இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை கோவிட்-19 வைரஸ் மிக கடுமையாக தாக்கியுள்ளது. இதில், சீனா மட்டுமே பாதிப்புகளில் இருந்து ஓரளவு மீண்டு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
எஞ்சிய நாடுகளின் நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே செல்கிறது. மேற்கண்ட நாடுகளை தவிர, உலகம் முழுவதும் இன்னும் பல்வேறு நாடுகளும் கோவிட்-19 வைரஸின் கோரப்பிடியில் சிக்கி தவிக்கின்றன. கண்ணுக்கே தெரியாத கோவிட்-19 வைரஸை எதிர்த்து மனித இனமே ஒன்று திரண்டு போரிட்டு வருகிறது. இதில், ஆட்டோமொபைல் நிறுவனங்களின் பங்களிப்பும் குறிப்பிடத்தகுந்த அளவில் உள்ளது.
கோவிட்-19 வைரசுக்கு எதிரான போரில், உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களை அர்ப்பணித்து கொண்டுள்ளன. வென்டிலேட்டர்கள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அதிக அளவில் தேவைப்படும் தற்போதைய சூழலில், அவற்றை தயாரித்து வழங்குவதற்கு, உலகின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பலவும் முன்வந்துள்ளன.
டெஸ்லா, ஜென்ரல் மோட்டார்ஸ், ஃபோர்டு மற்றும் இந்தியாவின் மஹிந்திரா என பல நிறுவனங்களை இதற்கு உதாரணமாக சொல்லலாம். மருத்துவ உபகரணங்களை தயாரித்து வழங்குவதுடன் மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளின் அரசுகளுக்கு நன்கொடைகளையும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன.
இந்தியாவை பொறுத்தவரை டாடா குழுமம் சார்பில், 1,500 கோடி ரூபாய் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. டாடா ட்ரஸ்ட் சார்பில் ரூ.500 கோடி மற்றும் டாடா சன்ஸ் சார்பில் ரூ.1,000 கோடி என டாடா குழுமம் சார்பில் ஒட்டுமொத்தமாக 1,500 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது. எனவே டாடா குழுமத்திற்கும், ரத்தன் டாடாவிற்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்த சூழலில் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் டாடா குழுமம் மருத்துவமனை ஒன்றை அமைக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இந்தியாவின் ஒரு சில மாநிலங்களில் கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. இதில், கேரளாவும் ஒன்று. இந்த சூழலில்தான், அங்கு மருத்துவமனையை அமைக்க டாடா குழுமம் முன்வந்துள்ளது.
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வருவதால், அவசர கால சூழ்நிலைகளை எதிர்கொள்ள வசதியாக சிறப்பு மருத்துவமனையை, காசர்கோடு மாவட்டத்தில் டாடா குழுமம் அமைக்கவுள்ளது. செம்மநாடு பஞ்சாயத்தில் உள்ள தெக்கில் என்ற கிராமத்தில், இந்த சிறப்பு மருத்துவமனை அமைக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் இன்ஜினியர்கள் உள்பட நிபுணர்கள் குழுவினர் அந்த இடத்தை பார்வையிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த சிறப்பு மருத்துவமனையில் 450 பேரை தனிமைப்படுத்தி வைப்பதற்கான வசதிகள் இருக்கும் என தெரிகிறது. மேலும் 540 படுக்கை மற்றும் தேவையான அனைத்து வசதிகளுடன் இந்த சிறப்பு மருத்துவமனை தயாராகிறது.
அடுத்த சில மாதங்களில் இந்த மருத்துவமனை தயாராகி விடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது கூடிய விரைவிலேயே எதிர்பார்க்கலாம். டாடா குழுமத்தின் இந்த முயற்சிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. டாடா குழுமத்தின் ஒரு அங்கமாகதான் இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கோவிட்-19 வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த இக்கட்டான நேரத்தில், இந்தியாவிற்கு டாடா குழுமம் செய்து வரும் தொடர்ச்சியான நல்ல காரியங்கள், நாட்டு மக்களின் மனதை நெகிழ வைத்துள்ளன. இதனால் இனி டாடா தயாரிப்புகளைதான் வாங்குவோம் என சமூக வலை தளங்களில் நெட்டிசன்கள் பலர் கருத்து தெரிவித்து வருவதை பரவலாக காண முடிகிறது.
நன்றி ஒன் இந்தியா !
COMMENTS